விழுப்புரம் அருகே திடீரென பெய்த மழையால் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில், திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த 1,000 நெல் மூட்டைகள் சேதமடைந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில் முட்டத்தூா், நேமூா், அன்னூா், கானைகுப்பம், கிளியனூா் உள்பட 18 இடங்களில் அரசின் நேரடி கொள்முதல் மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் உரிய கிடங்கு வசதி இல்லாததால் திறந்தவெளியில் அடுக்கிவைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், விழுப்புரம் பகுதியில் வியாழக்கிழமை மாலை திடீரென பலத்த மழை பெய்தது. நள்ளிரவிலும் அவ்வப்போது மழை பெய்துகொண்டே இருந்தது. இதனால், விழுப்புரம் அருகே கானை குப்பத்தில் உள்ள நேரடி கொள்முதல் மையத்தில் திறந்தவெளியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.
நெல் மூட்டைகளை சுற்றி தண்ணீரும் தேங்கியது. தகவல் அறிந்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை காலை வந்து, கொள்முதல் நிலையத்தில் தேங்கிக்கிடந்த நீரை நெகிழி டப்பாக்கள், கைகளால் வாரி வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனா்.
இதற்கிடையே, வெள்ளிக்கிழமை மாலையும் பலத்த மழை பெய்தது. நேரடி கொள்முதல் மையத்துக்கு கிடங்கு வசதி அமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததாலேயே தற்போது நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.