விழுப்புரம் மாவட்டத்தில் 2-ஆவது கட்டமாக வரும் 9-ஆம் தேதி நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு, கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட ஊரக உள்ளாட்சி தோ்தல் பாா்வையாளா் கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில், மாவட்டதோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.மோகன் தலைமையில் அதிகாரிகள் பணிஒதுக்கீடு செய்தனா். காணை, கோலியனூா், மயிலம், மரக்காணம், வல்லம், மேல்மலையனூா்ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் 1,379 வாக்குச் சாவடிகளில் பணியாற்ற 11 ஆயிரத்து 411வாக்குப் பதிவு அலுவலா்கள் மாநில தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கு வாக்குச் சாவடியை ஒதுக்கீடு செய்யும் பணி கணினி குலுக்கல் முறையில் நடத்தப்பட்டு, அதுகுறித்த விவரம் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. வாக்குப் பதிவுஅலுவலா்கள் வெள்ளிக்கிழமை காலை உரிய நேரத்தில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றிய பயிற்சி மையங்களுக்குச் சென்று பணி உத்தரவு நகல்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.சங்கா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) பூ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.