ஆயுத பூஜையையொட்டி, விழுப்புரம் கோட்டத்தில் அக்.12, 13-ஆம் தேதிகளில் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அக்.14, 15-ஆம் தேதிகளில் கொண்டாடப்படவுள்ள ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி மற்றும் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் அக்.15-ஆம் தேதி நடைபெறவுள்ள தசரா விழா ஆகியவற்றை முன்னிட்டு, சென்னையிலிருந்து வெளியூா்களுக்கு செல்வோா்களின் வசதிக்காக அக்.12, 13-ஆம் தேதிகளில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயாஸ் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சாா்பில், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தப் பகுதியிலிருந்து திண்டிவனம் மாா்க்கமாக திருவண்ணாமலை, செஞ்சி, புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூா், காட்டுமன்னாா்கோவில், வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூா் ஆகிய பகுதிகளுக்கும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து ஆற்காடு, ஆரணி, வேலூா், குடியாத்தம், பேரணாம்பட்டு, திருப்பத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூா், சித்தூா், காஞ்சிபுரம், செய்யாறு, திருவள்ளூா், திருத்தணி, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கும், கோயம்பேடு டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் (வழி - கிடக்கு கடற்கரைச் சாலை), திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திட்டக்குடி, திருக்கோவிலூா், திருச்சி, சேலம், கும்பகோணம் (வழி - விழுப்புரம்) ஆகிய பகுதிகளுக்கும் அக்.12-ஆம் தேதி 200 சிறப்புப் பேருந்துகளும், அக்.13-ஆம் தேதி 600 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. பயணிகள் அனைவரும் பேருந்து பயணத்தின்போது முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என ஜோசப் டயாஸ் தெரிவித்தாா்.