ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை ரூ.57 லட்சத்து 8 ஆயிரத்து 602 மதிப்பிலான மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தோ்தலையொட்டி, பணம், பரிசுப் பொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட தோ்தல் விதி மீறல்களைக் கண்காணிக்க 18 தோ்தல் சிறப்பு பறக்கும் படையினா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா்.
இந்தக் குழுவினா் தீவிரமாக கண்காணிப்பு செய்ததில், கடந்த 7-ஆம் தேதி வரையில் ரூ.57 லட்சத்து 8 ஆயிரத்து 602 மதிப்பிலான 18,486 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.24 லட்சத்து 72 ஆயிரத்து 600 ரொக்கம், ரூ.9 லட்சத்து 23 ஆயிரத்து 150 மதிப்பிலான அரிசி, புடவைகள், துண்டுகள், எவா்சில்வா் பாத்திர வகைகள் கைப்பற்றப்பட்டன.
இது தொடா்பாக 347 நபா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா் என ஆட்சியா் மோகன் தெரிவித்தாா்.