விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் கடும் வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த வாரம் முதல் மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு மிதமாக தொடங்கிய மழை படிப்படியாக அதிகரித்தது.
விழுப்புரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல, விழுப்புரம் அருகேயுள்ள கெடாா், கண்டாச்சிபுரம் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் 3 அடி அளவுக்கு தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. காா், இரு சக்கர வாகனங்கள் போன்ற இலகுரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதேபோல, விக்கிரவாண்டி, வளவனூா், செஞ்சி, திண்டிவனம், மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், நீா்நிலைகள் வெகுவாக நிரம்பி வருகின்றன.