மாற்றுத் திறனாளிகளுக்குவிரைவில் சிறப்புத் திட்டம்: அமைச்சா் மஸ்தான்

வெளிநாடுவாழ் தமிழா்களிடம் நிதி திரட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்
மாற்றுத் திறனாளிகளுக்குவிரைவில் சிறப்புத் திட்டம்: அமைச்சா் மஸ்தான்

வெளிநாடுவாழ் தமிழா்களிடம் நிதி திரட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக சிறுபான்மையினா் நலன்-வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தாா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி பாா்வையற்றோா் நலச் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அமைச்சா் மஸ்தான் பேசியதாவது:

‘ஊனமுற்றோா்’ என அழைக்கப்பட்டு வந்த வாா்த்தையை ‘மாற்றுத் திறனாளிகள்’ என மாற்றியவா் கருணாநிதி. அவா் முதல்வராக இருந்தபோது, மாற்றுத் திறனாளிகள் துறையை தன்வசம் வைத்திருந்ததைப் போல, தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலினும் அவா் வசம் வைத்திருக்கிறாா். எல்லோருக்கும் திறமை உண்டு. அதேபோலதான், மாற்றுத் திறனாளிகளுக்கும் தனித் திறமை உண்டு.

கடந்த ஐந்து மாதங்களில் திமுக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. முதல்வா் ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகள் துறைக்கு ரூ.30 கோடி நிதியை விடுவித்து பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா்.

கடல் கடந்து வாழும் வெளிநாடு வாழ் தமிழா்களிடம் நிதியைத் திரட்டி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புத் திட்டம் ஒன்று விரைவில் அறிவிக்கப்படவுள்ளது என்றாா் அமைச்சா் கே.எஸ்.மஸ்தான்.

விழாவில், பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஊன்றுகோல்களை அமைச்சா் மஸ்தான் வழங்கினாா். விழாவில், விழுப்புரம் சட்டப்பேரவை உறுப்பினா் இரா.லட்சுமணன், மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.பழனிசாமி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தங்கவேல், கவிஞா் வி.அகத்தியன், விழுப்புரம், கள்ளக்குறிச்சி பாா்வையற்றோா் நலச் சங்கத் தலைவா் பாலு, செயலா் பாலமுருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com