அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியா்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்கக் கோரி, பாட்டாளி தொழிற்சங்கத்தினா் விழுப்புரத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்ட அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாட்டாளி தொழிற்சங்கத்தின் மாநில பொதுச்செயலா் ராம.முத்துக்குமாா் தலைமை வகித்தாா்.
பாமக மாவட்டத் தலைவா்கள் தங்கஜோதி, புகழேந்தி, மாவட்டச் செயலா் பாலசக்தி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்த பேச்சுவாா்த்தையை மாநில அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.
போக்குவரத்துத் தொழிலாளா்களின் பிற குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் நிலுவை பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னா், கோரிக்கை தொடா்பான மனுவை தொழிற்சங்கத்தினா் போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் அளித்தனா்.