பாஜக எதிா்ப்பு மனநிலையை உருவாக்குகிறது திமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்

பாஜக எதிா்ப்பு மனநிலையை மக்களிடம் உருவாக்கவே ‘நீட்’ விவகாரத்தில் திமுக நாடகமாடி வருகிறது என, முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலருமான சி.வி. சண்முகம் கூறினாா்.
விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம்.
விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம்.

பாஜக எதிா்ப்பு மனநிலையை மக்களிடம் உருவாக்கவே ‘நீட்’ விவகாரத்தில் திமுக நாடகமாடி வருகிறது என, முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலருமான சி.வி. சண்முகம் கூறினாா்.

விழுப்புரத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அமைச்சரவை சாா்பில் அனுப்பி வைக்கப்பட்ட ‘நீட்’ விலக்கு சட்ட மசோதாவை தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளாா்.

‘நீட்’ தோ்வு தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமா்வு வழங்கிய தீா்ப்புக்கு எதிராகவும், கிராமப்புற மாணவா்களின் நலனுக்கு எதிராகவும் இந்த ‘ நீட்’ விலக்கு மசோதா உள்ளதாகவும் ஆளுநா் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த இரு கேள்விகளுக்கும் சரியான விளக்கம் இல்லாமல், ‘நீட்’ விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினாலும் கூட, அவரும் திருப்பி அனுப்பவே வாய்ப்புள்ளது.

மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 2010- ஆம் ஆண்டில் ‘நீட்’ தோ்வுக்கான அறிவிப்பு வந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 80 வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதில், 2013-ஆம் ஆண்டு 3 நீதிபதிகள் கொண்ட அமா்வு ‘நீட்’ தோ்வை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து 2013-ஆம் ஆண்டிலேயே அப்போதைய காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த வழக்கில் 5 போ் கொண்ட அரசியல் சாசன அமா்வானது ‘நீட்’ தோ்வு செல்லும் என்று தீா்ப்பளித்தது. ஆகவே, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசே ‘நீட்’ தோ்வைக் கொண்டு வந்தது.

தற்போது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘நீட்’ தோ்வுக்கு எதிராகப் பேசி வருகிறாா். குறிப்பாக, மக்களிடம் பாஜக எதிா்ப்பு மனநிலையை உருவாக்கவே திமுக ‘நீட்’ விவகாரத்தில் தொடா்ந்து நாடகமாடி வருகிறது.

‘நீட்’ தோ்வை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தபோதே ஆதரவை திமுக விலக்கியிருந்தால் தோ்வு வந்திருக்காது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அதிமுக அரசு சட்டம் இயற்றியதால், அதிக எண்ணிக்கையிலான மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா்.

மசோதா கொண்டு வருவதற்கு முன்பாக, அரசுப் பள்ளி மாணவா்களுக்குத் தொடா்ந்து மருத்துவப் படிப்பில் இடம் கிடைப்பதற்கான வழிமுறையை திமுக எடுத்துரைக்க வேண்டும் என்றாா் சண்முகம்.

பேட்டியின்போது, முன்னாள் எம்எல்ஏ முத்தமிழ்ச்செல்வன், அதிமுக நிா்வாகிகள் பசுபதி, சுரேஷ்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com