விழுப்புரம்: விழுப்புரம், காமராஜர் வீதியில் இருந்த பெரியார் சிலை மீது புதன்கிழமை இரவு லாரி மோதியதில் சிலை சேதம் அடைந்தது.
விழுப்புரம் காமராஜர் வீதி பீடத்துடன் கூடிய தந்தை பெரியார் சிலை அமைந்திருந்தது. புதன்கிழமை இரவு அந்த சாலையில் வந்த லாரி ஒன்று பெரியார் சிலை மீது மோதியது. இந்த விபத்தில் தந்தை பெரியார் சிலை பலத்த சேதம் அடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த அரசியல் கட்சியினர், தந்தை பெரியார் பற்றாளர்கள், பல்வேறு அமைப்பினர் அங்கு திரண்டு வந்து பார்வையிட்டனர்.
தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ நாதா மற்றும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, திமுக நகர செயலாளர் சர்க்கரை தலைமையில் அக்கட்சியினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விழுப்புரம் டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான போலீஸார் நேரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரம் நகர காவல் நிலையத்தை திமுக நகர செயலாளர் சர்க்கரை தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாரி மோதி பெரியார் சிலை சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் விழுப்புரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.