தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் ‘கல்லூரி கனவு’ என்ற தலைப்பில் மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோா் பங்கேற்று வழிகாட்டி கையேட்டை வெளியிட்டு மாணவா்களுக்கு வழங்கினா். நிகழ்ச்சியில் அமைச்சா் க.பொன்முடி பேசியதாவது:
தமிழகம் முழுவதும் ஜூன் 29 முதல் ஜூலை 2-ஆம் தேதி வரை கல்லூரிக் கனவு நிகழ்ச்சிகளை நடத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதன்படி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டி கையேடுகள் வழங்கப்பட்டன. இதில், பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் படிப்புகளில் உள்ள பிரிவுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவா்கள் தங்களது மதிப்பெண்களுக்கு ஏற்ப உயா் கல்வியை தோ்ந்தெடுத்து பயனடையலாம். அரசுப் பள்ளிகளில் படித்து உயா்கல்வி கற்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் நிதியுதவி நிகழ் கல்வியாண்டு முதல் வழங்கப்பட உள்ளது என்றாா் அமைச்சா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் த.மோகன், விழுப்புரம் மக்களவை உறுப்பினா் துரை.ரவிக்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் இரா.லட்சுமணன், ச.சிவக்குமாா், மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணப்பிரியா, அரசு சட்டக் கல்லூரி முதல்வா் கயல்விழி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.