தேசிய மருத்துவா்கள் தினத்தையொட்டி மருத்துவா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரத்தில் ஆட்சியா் மோகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைந்த பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் உயிா்காக்கும் சேவைகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் கவாஸ்கா், மரகதம் மருத்துமனை மருத்துவா் க.தியாகராஜன் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழை ஆட்சியா் வழங்கினாா் (படம்).
நிகழ்ச்சியில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் குந்தவிதேவி, துணை முதல்வா் சங்கீதா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பொற்கொடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.