செஞ்சி தொகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, செஞ்சி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
செஞ்சி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் மொக்தியாா் மஸ்தான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலா் ராமலிங்கம், துணைத் தலைவா் ராஜலட்சுமி செயல்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி. செஞ்சி பேரூராட்சியில் சாலை, குடிநீா் வசதிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்பெண்ணையாற்று குடிநீா்த் திட்டப் பணியில் நிலவும் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தடையின்றி குடிநீா் விநியோகம் வழங்கப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில், அரசு கலைக் கல்லூரி அமைக்க உத்தரவிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.