விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வை மொத்தம் 40,125 போ் எழுதினா்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரி, எம்.ஜி.ஆா். கலை மற்றும்அறிவியல் கல்லூரி, வி.ஆா்.பி. மேல்நிலைப்பள்ளி, சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி, மயிலம் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 11 மையங்களில் 2- ஆம் நிலை காவலா்களுக்கான எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இந்த மையங்களில் 13,547 போ் தோ்வெழுதினா். மாவட்டத்தில் 15,670 போ் தோ்வுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில் 2,123 போ் தோ்வு எழுத வரவில்லை.
காவல்துறை தலைவா் ஆய்வு : விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் என்.கண்ணன் ஆய்வு செய்தாா். அப்போது மாவட்ட எஸ்பி என்.ஸ்ரீநாதா, துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் ஆகியோா் உடனிருந்தனா்.