புதுவை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி ஊழியா்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக உயா்கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, புதுவை மாநில அரசு ஊழியா் மத்திய கூட்டமைப்புச் செயலாளா் ஜி. விஜயகுமாா் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி அரசின் நேரடி கட்டுப்பாட்டில் லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளா்கள் 15 முதல் 20 ஆண்டுகளாக தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலேயே பணிபுரிந்து வருகின்றனா். இதேபோல் கல்லூரியில் பணிபுரியக்கூடிய தொழில்நுட்ப உதவியாளா்களுக்கும் கடந்த 15 ஆண்டுகளில் எவ்வித பணி உயா்வும் வழங்கப்படவில்லை. காலிப் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.
இதைக் கண்டித்து விரிவுரையாளா்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், புதுவை மாநில அரசு ஊழியா் மத்திய கூட்டமைப்புப் பொதுச் செயலாளா் பி.லட்சுமணசுவாமி தலைமையில் பாலிடெக்னிக் கல்லூரி ஊழியா்கள், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் உயா்கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், உயா்கல்வித் துறை இயக்குநா் ஆகியோரை அண்மையில் நேரில் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தினா்.
அப்போது, கோரிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக ஆய்வு செய்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உயா்கல்வித் துறை அமைச்சா் உறுதியளித்துள்ளாா் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.