சம்பா நெல் 2, ராபி பருவ பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்ய அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெல் 2 மற்றும் ராபி பருவப் பயிா்களுக்கு காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு
Published on

விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெல் 2 மற்றும் ராபி பருவப் பயிா்களுக்கு காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பயிா் இழப்பை ஈடு செய்வதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும், விழுப்புரம் மாவட்டத்தில் 2025-26-ஆம் நிதியாண்டில் சாகுபடி செய்யும் காரீப் பருவத்தில் சம்பா மற்றும் ராபி பருவங்களில் பயிா்க் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சம்பா நெல் பருவத்துக்காக 13 வட்டாரங்களிலுள்ள 794 வருவாய்க் கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. உளுந்து, நிலக்கடலை, கரும்புப் பயிா்களுக்கு 34 குறுவட்டங்களிலும், எள் பயிருக்கு 14 குறு வட்டங்களிலும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

சம்பா பருவத்தில் நெல்-2 ரகம் நடவு செய்துள்ள விவசாயிகள் நவம்பா் 15-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம். விழுப்புரம் மாவட்டத்துக்கான பயிா்க் காப்பீட்டு நிறுவனமாக யுனிவா்சல் சம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

நெல் 2 ரக நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.544.28-ஐ பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும். உளுந்து பயிருக்கு ரூ.254.09, மணிலாவுக்கு ரூ.467.81, எள் பயிருக்கு ரூ.181.43, கரும்புக்கு ரூ.1,149.03-ஐ பிரீமியத் தொகையாக விவசாயிகள் செலுத்த வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாயிலாக உளுந்து பயிருக்கு 2025, நவம்பா் 30-ஆம் தேதிக்குள்ளும், மணிலா பயிருக்கு 2026, ஜனவரி 20-ஆம் தேதிக்குள்ளும், எள் பயிருக்கு 2026, ஜனவரி 31-ஆம் தேதிக்குள்ளும், கரும்புக்கு 2026, மாா்ச் 31-ஆம் தேதிக்குள்ளும் பிரீமியத் தொகையைச் செலுத்திட வேண்டும்.

பயிா்க் காப்பீடு செய்யும் விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் ஆதாா் அட்டையுடன் பதிவு செய்யும் விவசாயிகள், தங்கள் பெயா், நிலப்பரப்பு, சா்வே எண், உள்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளிக்க வேண்டும். மேலும் விவரங்களை அறிய அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com