தொப்புள் கொடி சரியாய் விழவில்லை
உதிரத்தின் ஈரம் கூட காயவில்லை
குப்பைக் கிடங்கில் ஓர்
எதிர்காலம்.
கருவறைக்குள்ளே
இருந்தபோது ஒரு
பாதுகாப்பாய் இருந்தது
வெளிவந்து
அதுவும் தொலைந்து போனது.
நாய்களின் முகர்தலுக்கும்
கால்நடைகளின் நக்குதலுக்கும்
ஈடுகொடுத்திருந்ததால்
அவ்வுயிர்
காப்பாற்றப்படுகிறது.
அநாதையாக்கப்பட்டு விட்டோமே
என்று
அச்சிசு எழுந்து
யாரைத் தேடும் - இனி
என்ன கேட்டு அழும்?
மனிதப் பிறப்புக்கும்
மிருகப் பிறப்புக்கும்
வித்தியாசமின்றி போனது.
பைத்தியக்காரனாய்
பிச்சைக்காரனாய்
திருடனாய் அல்லது
ஒரு கொலைகாரனாகத்தான் இனி
பார்க்க வேண்டுமா?
ஆண் பெண்ணின் சுகத்தினில்
உருவான ஒரு மடல்
முழுதும் வாசிக்கப்படாமலேயே
இங்கே
வீதியில் வீசப்படுகிறது.
தாய்மையின்
உட்பொருளறிந்த
எப்பெண்ணும் இப்பாவம்
புரியமாட்டாள்.
ஒருவருள்
ஈவிரக்கம்
அறுந்திருந்தால் மட்டுமே
இச்செயல் செய்வர்.
இனி
பிரசவிப்புக்கென்று
ஒரு தணிக்கைக் குழு
நிறுவுதல் அவசியம்!
(கோபால்தாசன் கவிதைகள்)