தேமுதிக மகளிரணியின் பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் வியாழக்கிழமை (மார்ச் 10) நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பான அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் தேமுதிக மகளிரணியின் பொதுக் கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு விஜயகாந்த் தலைமை வகிக்கிறார். பிரேமலதா விஜயகாந்த் முன்னிலை வகிக்கிறார்.
அறிவிப்பு உண்டா? தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதற்கு திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகிய கட்சிகள் முயற்சித்து வருகின்றன.
திமுக கூட்டணிக்கு தேமுதிக நிச்சயம் வரும் என்று கருணாநிதி கூறியுள்ளார். இதற்கிடையில், தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை முறியவில்லை. தொடர்ந்து பேசி வருகிறோம் என்று பாஜக தரப்பிலும் கூறப்பட்டுள்ளது. மேலும், தேமுதிக மக்கள் நலக் கூட்டணிக்குத்தான் வரும் என்று அதன் ஒருங்கிணைப்பாளரான வைகோவும் கூறியுள்ளார்.
இதனால், கூட்டணி தொடர்பான தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக இருந்து வருகிறது.
இந்த நிலையில் மகளிரணிப் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் தன் முடிவை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.