தேர்தல் செலவினங்களை கண்காணிக்க மத்தியப் பார்வையாளர்கள்: ஏப்ரல் 19 இல் தமிழகம் வருகை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க மத்திய பார்வையாளர்கள் அடுத்த
தேர்தல் செலவினங்களை கண்காணிக்க மத்தியப் பார்வையாளர்கள்: ஏப்ரல் 19 இல் தமிழகம் வருகை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க மத்திய பார்வையாளர்கள் அடுத்த வாரம் தமிழகம் வருகின்றனர். ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழகம் வரும் இவர்கள் சென்னை, திருச்சி, மதுரை, கோயமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க உள்ளனர் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
 மத்திய பத்திரிகை தகவல் மையத்தின்(பிஐபி) சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டப் பேரவைத் தேர்தல்-2016 கையேட்டை தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் சனிக்கிழமை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
 சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி அனைத்து வகையான ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்குக்குப் பணம் அளிப்பதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுக் கூட்டங்களுக்கு, பொது மக்களை பணம் கொடுத்து அழைத்து வருகிறார்களா என்பதும் விடியோ பதிவு மூலமாக கண்காணிக்கப்படுகிறது. அவ்வாறு பணம் கொடுத்தும், சாப்பாடு போட்டும் அழைத்து வந்தால், அதற்குரிய செலவுகள் அனைத்தும் அந்தப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.
 தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுவது வருகிற 22-ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் அதிகாரிகள் தமிழகம் வருவது இதுவே முதல் முறையாகும். வருகிற 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை அவர்கள் தமிழகத்தில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவர்.
 தமிழகத்துக்கு வரும் இந்திய வருவாய் பணியைச் சேர்ந்த 12 அதிகாரிகளும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். வருவாய் பணி அதிகாரிகளான பிரசென்ஜித் சிங், சி.வி.ஆனந்த், சஞ்சீவ் ஆகியோர் விழுப்புரம், திருச்சி, புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வர். இதேபோன்று, ராஜீவ் சின்கா, அனூஜ் அரோரா, பி.வி.ராவ் ஆகியோர் சென்னை மண்டலத்திலும், சுனில் சர்மா, பி.பசன்டியா, சாஷி பூஷண் சுக்லா ஆகியோர் மதுரை மண்டலத்திலும், மனல் ஆர்.மோகந்தி, விலாஸ் வி.சிண்டே, சஞ்சீவ் கோயல் ஆகியோர் கோவை மண்டலத்திலும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவர்.
 இந்த 12 அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களுக்கு உட்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் கண்காணிப்பை மேற்கொள்வர். அரசியல் கட்சிகளின் செலவினங்கள் அனைத்தையும் இந்தப் பார்வையாளர்கள் கண்காணித்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிப்பர்.
 இதைத்தொடர்ந்து, தொகுதிக்கு ஒரு செலவினப் பார்வையாளர் என்ற முறையில் 234 பார்வையாளர்கள் வரவுள்ளனர்.
 அரசியல் கட்சிகள் நடத்தும் தொலைக்காட்சிகளில் தேர்தல் பிரசாரம் செய்தாலும் அது வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கில் வந்துவிடும். வாக்குக்குப் பணம் வாங்கக் கூடாது என்ற விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளோம். இவ்வாறு பணம் வாங்குவது வெட்கக்கேடானது என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரசார குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
 இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற சோதனைகளில் ரூ.23.66 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் பிடிபட்டுள்ளது. இவற்றில் சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய ஆவணங்களைக் கொடுத்ததை அடுத்து ரூ.16.81 கோடி திருப்பியளிக்கப்பட்டுள்ளது.
 தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக 275 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழகம் வர உள்ளனர். இதுதவிர மேலும் 25 கம்பெனி துணை ராணுவப்படையினர் கூடுதலாகத் தேவை என கேட்டுள்ளோம் என்றார் ராஜேஷ் லக்கானி.
மதுபான உற்பத்தி ஆலைகளும் கண்காணிப்பு
 தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி, அதிகளவு மதுபான உற்பத்தி செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து மதுபான உற்பத்தி ஆலைகளிலும் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
 சட்டப் பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணமும், மதுபான பாட்டில்களும் அதிகளவு கொடுப்பதாக புகார்கள் எழுகின்றன. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் மதுபான அளவு, தேர்தல் துறையால் தினமும் பெறப்படுகிறது. வழக்கமான அளவு விற்பனையை விட 30 சதவீதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்டால் அதுகுறித்து விளக்கம் அளிக்கவும் கோரியுள்ளோம்.
 டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாது, மதுபான உற்பத்தி ஆலைகளும் கண்காணிக்கப்பட உள்ளன. இந்த ஆலைகளில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த உத்தரவிட்டுள்ளோம். அங்கு உற்பத்தி செய்யப்படும் மதுபானத்தின் அளவு, அதிகளவு மதுபானம் எடுத்துச் செல்லப்படுகிறதா போன்றவையும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். மதுபான உற்பத்தி ஆலைகளையும் கண்காணிப்பது இதுவே முதல் முறையாகும் என்றார் ராஜேஷ் லக்கானி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com