தேமுதிகவுடான கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்வது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியும், பொருளாளர் மு.க.ஸ்டாலினும் முரண்பாடாக கருத்து கூறியுள்ளனர்.
திமுக கூட்டணியில் தேமுதிகவும் இடம்பெற வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா மார்ச் 19-ஆம் தேதி பேட்டி அளித்தார்.
அவர் பேட்டி அளித்த சில மணி நேரத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைப் பார்ர்த்தார்.
அப்போது, தேமுதிக திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று கூறுவது ஜவாஹிருல்லாவின் தனிப்பட்ட விருப்பம். தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தோம், அதை ஏற்பதும், ஏற்காததும் தேமுதிகவின் உரிமை என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
அதன் பிறகு, திராவிடர் கழகத்தின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டுக்குச் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம், தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஆனால், அதற்கு மாறாக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கருணாநிதி திங்கள்கிழமை கூறினார்.
பேச்சுவார்த்தை தொடர்பாக கருணாநிதி - ஸ்டாலின் முரண்பாடாக கருத்து கூறுவது, திமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.