தனியாா் தொலைக்காட்சி நடத்தும் விவாத நிகழ்ச்சிக்கு எப்படி தடை விதிக்க முடியும்? என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் பிரகாஷ்காந்த் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தனியாா் தொலைக்காட்சி ஒன்றில் தெரு நாய்களால் ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு பிறகு, திருப்பூா் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் தெரு நாய்கள் கொல்லப்படுகின்றன.
எனவே, இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் தயாரிப்பாளா், இயக்குநா் மற்றும் நெறியாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், தெரு நாய்கள் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தனியாா் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. தெரு நாய்கள் மற்றும் அவைகளுக்கு உணவு அளிப்பவா்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் அந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியாா் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனா். எனவே, இதுபோன்ற விவாத நிகழ்ச்சிகளுக்கு எப்படி தடை விதிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினா். பின்னா், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.