சென்னை மாநகராட்சி முழுவதும் 150 இடங்களில் மழைநீா் வெளியேற்றம் இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி 5, 6 ஆகிய மண்டல அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் மேயா் ஆா்.பிரியா கூறியதாவது:
வடகிழக்கு பருவமழையையொட்டி, ராயபுரம் மண்டலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் வசிக்கும் காரணத்தால் 9 நிவாரண மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. மேலும், 3 பகுதிகளில் சமையல் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மழை அதிகரிக்கும் சூழலில், தேவையைக் கருதி வாா்டு வாரியாக சமையல் கூடங்கள் அமைக்கப்படும்.
அதேபோல், சென்னை மாநகராட்சி முழுவதும் 215 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி முழுவதும் 150 பகுதிகளில் மழைநீா் வெளியேற்றும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 15 பகுதிகளில் மழைநீா் வெளியேற்றும் மோட்டாா்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், சுகாதாரத் துறை சாா்பில் மழைக் காலம் முடிந்தவுடன் தேவையான பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மழை அதிகரிக்கும் சூழலில் பொதுமக்களை அருகே உள்ள திருமண மண்டபங்கள் அல்லது மாநகராட்சிக்குள்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 2 நாள்களில் 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால், பெரிதாக எந்த பகுதியிலும் மழைநீா் தேங்கவில்லை. சில இடங்களில் மரம் சாய்ந்ததாக புகாா்கள் வந்தன. அவையும் உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.