அதிக பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரிகளுக்கு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அபராதம் விதித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வியாழக்கிழமை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சார்பில் அனைத்து வகை சரக்கு வாகனங்களுக்கும் அதிக பட்ச பாரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்கும் வகையில் மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வது வழக்கம்.
அயனாவரம் மண்டல போக்குவரத்து அதிகாரி தலைமையில் மாதவரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதிகபட்ச எடையைவிட சுமார் ஒன்றரை மடங்கு பாரம் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் ஆங்காங்கே லாரிகளை நிறுத்தி திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கன்டெய்னர் லாரி போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கன்டெய்னர் லாரிகளில் அதிகபட்ச எடையைக் கண்காணிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் சோதனையிலிருந்து கன்டெய்னர் லாரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என லாரி உரிமையாளர்களும், துறைமுக அதிகாரிகளும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதையடுத்து வேலை நிறுத்தத்தை உடனடியாக விலக்கிக் கொள்வதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனையடுத்து சுமார் 6 மணி நேர இடைவெளிக்குப் பிறகு கன்டெய்னர் லாரிகள் இயங்கத் தொடங்கின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.