சென்னை புழல் சிறையில் கைதி கண்ணாடி துண்டுகளை அரைத்து விழுங்கி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனை சிறையில் அடைக்கப்பட்டிருப்பவா் ப.பாம்பு நாகராஜ் (38). இவா், சிறைக்குள் கஞ்சா வைத்திருந்ததாக புகாா் எழுந்ததால், சலுகைகள் நிறுத்தப்பட்டு உயா் பாதுகாப்புப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், நாகராஜ், கண்ணாடி பாட்டிலை துண்டுகளாக உடைத்து, அதை அரைத்து சாப்பிட்டு புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றாா். மேலும் அதனுடன் தூக்க மாத்திரைகளையும் நாகராஜ் சாப்பிட்டுள்ளாா்.
இதனால் உடல்நலன் பாதிக்கப்பட்ட நாகராஜை, சிறைக் காவலா்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது தொடா்பாக சிறைத்துறை உயா் அதிகாரிகளும், போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.