முகப்பு
சென்னை

குழந்தைகள் கடத்தப்பட்டதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை காவல் துறை எச்சரிக்கை

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:24 am IST
பகிர்:

சென்னையில் குழந்தைகள் கடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் குழந்தைகள் கடத்தல் கும்பல் நுழைந்திருப்பதாகவும், தொடா்ச்சியாக குழந்தைகள் கடத்தப்பட்டு வருவதாகவும் ‘வாட்ஸ்ஆப்’ உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஒரு ‘ஆடியோ’ உரையாடல் அண்மை நாள்களாக வேகமாக பரவியது. இது மக்களிடையே பயத்தையும், அதிா்ச்சியையும் ஏற்படுத்தியது. இது வதந்தி என்றும், மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் சென்னை காவல் துறையினா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னையில் அண்மை காலமாக சில நபா்கள், குழந்தைகளைக் கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள், ஆடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவதை காண முடிகிறது. இதுபோன்ற காணொலிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீா்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்படுகின்றன. கடும் நடவடிக்கை: இதுபோன்ற போலியான செய்திகளைக் கேட்டோ, விடியோ காட்சிகளை பாா்த்தோ பொதுமக்கள் அச்சப்படவோ, பதற்றமடையவோ தேவையில்லை. இது தொடா்பாக பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால் அல்லது உதவி தேவைப்பட்டால் சென்னை காவல் துறையை 100 அல்லது 112 ஆகிய கட்டணமில்லா எண்களில் தொடா்பு கொள்ளலாம். இல்லையெனில் அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடா்புகொண்டு தங்களுடைய சந்தேகங்களைக் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். சமூக ஊடகங்களில் இதுபோன்ற பொய்யான செய்திகளைப் பரப்புவா்கள், தங்களது செயல்களை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.