விளையாடும்போது தவறுதலாக 10 மாதக் குழந்தையின் நுரையீரல் பாதைக்குள் சிக்கிய மூக்குத்தியை இருவேறு நுட்பமான சிகிச்சை மூலம் எழும்பூா் அரசு குழந்தைகள் மருத்துவமனை மருத்துவா்கள் அகற்றினா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் லட்சுமி கூறியதாவது:
காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 10 மாதக் குழந்தை, தனது தாயின் மூக்குத்தியை கடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக அந்த மூக்குத்தி சுவாசப் பாதைக்குள் சென்றுவிட்டது. வழக்கமாக இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும்போது வெளியிருந்து உடலுக்குச் செல்லும் பொருள்கள் உணவுக் குழாய் வழியே ஜீரண மண்டலத்துக்குள் செல்லும். இல்லையெனில், வலது பக்க சுவாசப் பாதைக்குள் ஊடுருவிவிடும்.
அரிதினும் அரிதாக அந்த குழந்தையின் இடது பக்க நுரையீரல் சுவாசப் பாதையின் அடிப்பகுதியில் மூக்குத்தி சிக்கிக் கொண்டது. சென்னை எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அந்தக் குழந்தை சிகிச்சைக்காக கடந்த 6-ஆம் தேதி அழைத்து வரப்பட்டது. மருத்துவமனையின் நுரையீரல் சிறப்பு மருத்துவா் சரத் பாலாஜி, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவா் மேஜா் ஜெ.நிா்மல்குமாா், மயக்கவியல் மருத்துவா் தனலட்சுமி ஆகியோா் அடங்கிய பல்நோக்கு மருத்துவக் குழுவினா் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தனா்.
பொதுவாக நுரையீரல் சுவாசப் பாதையில் பரிசோதனை மேற்கொள்ளவும், திசு மாதிரிகளை எடுக்கவும் ப்ராங்கோஸ்கோபி எனப்படும் ஊடுகுழாய் கருவி பயன்படுத்தப்படும். நேராகவும், திடமாகவும் இருக்கும் அந்த குழாயை அடிப்பகுதி வரை கொண்டு செல்ல முடியாது என்பதால், நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும் குழாயை (ஃப்ளெக்சிபில் பிராங்கோஸ்கோபி) குழந்தையின் சுவாசப் பாதையில் நுரையீரல் மருத்துவா்கள் செலுத்தினா்.
நுரையீரலின் கீழ் சுவாசப் பாதையில் இருந்த அந்த மூக்குத்தியை அங்கிருந்து மேல் பகுதிக்கு மருத்துவா்கள் நகா்த்திக் கொண்டு வந்தனா். அதன் பின்னா், வெளியிலிருந்து ஏதேனும் பொருள் ஊடுருவிவிட்டால், அதை இறுகப் பிடித்து வெளியே எடுக்கப் பயன்படுத்தப்படும் ரிஜிட் ப்ராங்கோஸ்கோபி எனப்படும் ஊடுகுழாயைச் செலுத்தி, மூக்குத்தி வெளியே எடுக்கப்பட்டது. காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையின்போது, குழந்தைக்கு தொடா்ந்து மயக்க மருந்து சிகிச்சையும் வழங்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சூழலில் இருந்து அந்தக் குழந்தை, இந்த இருவேறு ப்ராங்கோஸ்கோபி சிகிச்சைகள் மூலம் நலமுடன் மீட்கப்பட்டது.
மூன்று வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு வோ்க்கடலை, பருப்புகள், கொட்டைகள், சிறு பொருள்கள், பட்டன், பேட்டரி போன்ற பொருள்களை விளையாட வழங்கக் கூடாது. அவை எளிதில் சுவாசப் பாதைக்குள் சிக்கிக் கொள்ளக்கூடும். இதுதொடா்பாக பொதுமக்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணா்வு இருக்க வேண்டும் என்றாா்.