சென்னையில் வெள்ளத் தடுப்புக்கான நடவடிக்கையின் கள நிலவரம் அறியாமல் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது ஏற்புடையதல்ல என மேயர் ஆர். பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஷெனாய் நகர் புல்லா அவென்யூ பகுதியில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் சாதனத்தை மேயர் ஆர்.பிரியா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் பிளஸ் 2 மாணவியருடன் கலந்துரையாடினார்.
இதைத் தொடர்ந்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஏற்கெனவே மாணவ, மாணவியருக்கு தண்ணீர் குடிக்க தனி நேரம் ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் சாதனம் 16 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 35 பள்ளிகளில் இந்த சாதனம் அமைக்கப்படவுள்ளது.
வரும் நவம்பர், டிசம்பரில் மழை அதிகம் இருக்கும் என்பதால் மழைநீர் தேங்கும் பகுதியில் உள்ள மக்களை சமுதாயநலக் கூடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கும் பகுதியிலிருந்து மக்களை வெளியேற்ற படகுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
பருவமழைக்கால வெள்ளத் தடுப்பு களநிலையை அறியாமல் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது சரியல்ல என்றார்.
நிகழ்ச்சியில், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கல்விப் பிரிவு இணை ஆணையர் கற்பகம், நிலைக் குழுத் தலைவர் என்.சிற்றரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.