வாலாஜாபாத் வட்டம், கட்டவாக்கம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 218 பயனாளிகளுக்கு ரூ. 60 லட்சத்து 44 ஆயிரத்து 550 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கட்டவாக்கம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது.
முகாமில், கடந்த 15 தினங்களுக்கு முன்பு மக்களிடம் இருந்து வாங்கிய 190 மனுக்களில் 60 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டன. 10 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 120 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சிகளை ஆட்சியர் பார்வையிட்டார். இம்முகாமில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 26 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள், வீட்டு மனைப் பட்டா, பட்டா பெயர் மாறுதல், விலையில்லா தையல் இயந்திரம், விலையில்லா சலவைப் பெட்டி, மண்வள அட்டை, உளுந்து விதை திட்டம், தாட்கோ மூலம் 3 பேருக்கு ரூ. 15,20,537 மதிப்பிலான மானியத்துடன் கடனுதவி உள்ளிட்ட 218 பயனாளிகளுக்கு ரூ. 60 லட்சத்து 44 ஆயிரத்து 550 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பின்னர் அருகில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் மரக் கன்று நட்டார்.
நிகழ்ச்சியில் எம்.பி. மரகதம் குமரவேல், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன், சார் ஆட்சியர் அ.அருண்தம்புராஜ், தனித் துணை ஆட்சியர் சக்திவேல் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.