படப்பை இ-சேவை மையத்தில் சர்வர் பழுது: பொதுமக்கள் அவதி
படப்பை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தில் கடந்த ஒரு மாத காலமாக சர்வர் பழுதடைந்துள்ளதால் பல்வேறு தேவைகளுக்காக வரும் பொதுமக்கள்
படப்பை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தில் கடந்த ஒரு மாத காலமாக சர்வர் பழுதடைந்துள்ளதால் பல்வேறு தேவைகளுக்காக வரும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
படப்பை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அரசு இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை, படப்பை, அதனைச் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஜாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெறவும், ஆதார் அட்டை பெறுவதற்கு புகைப்படம் எடுக்கவும், ஆதார் அட்டையில் திருத்தம் செய்யவும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த இ-சேவை மையத்தில் கடந்த ஒரு மாத காலமாக சர்வர் பழுதடைந்துள்ளதால் சான்றிதழ்கள் பெற பதிவு செய்யவும், ஆதார் அட்டையில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவும் வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஒரு மாத காலமாக இ-சேவை மையத்தில் சர்வர் பழுதடைந்துள்ளதாகவும், இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பிரிண்டர் பழுதடைந்துள்ளது எனவும் மையத்தில் பணியாற்றுவோர் கூறி வருகின்றனர். இதனால் கடந்த ஒரு மாதமாக இ-சேவை மையத்துக்கு வெயிலில் வந்து செல்வதால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளோம் எனவே இ-சேவை மையத்தில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்க வேண்டும் என்றனர்.
மையத்தில் பணியாற்றும் ஊழியர் கூறுகையில், சர்வர் பழுதடைந்துள்ளது உண்மை தான். இன்டர்நெட் வசதியும் அவ்வப்போது துண்டிக்கப்படுவதால் பொதுமக்களின் மனுக்களை ஏற்க முடியாமல் உள்ளது. சர்வர் பழுது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.