செங்கல்பட்டில் அறிவிக்கப்படாத 10 மணி நேர மின்வெட்டு
செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் திங்கள்கிழமை அறிவிக்கப்படாத மின்வெட்டு 10 மணிநேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் பொதுமக்களின்
செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் திங்கள்கிழமை அறிவிக்கப்படாத மின்வெட்டு 10 மணிநேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மகாளய அமாவாசை தின சிறப்பு வழிபாடு கடைபிடிக்கப்பட்டதை அடுத்து வீடுகளில் உணவு தயாரிப்பதற்கான மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய மின்சாதனங்களை மின்வெட்டால் இயக்க முடியாமல் பெண்கள் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புள்ள முதியோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடைகள் மற்றும் சிறிய உணவகங்களில் மின்சாரம் இல்லாததால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டில் பெரும்பாலான மக்கள் வாடகை குடியிருப்புகளில் வசிக்கின்றனர். வாடகைக்கு விடுவதற்காகவே கட்டடங்கள் காற்று மற்றும் வெளிச்சம் புக முடியாத அளவுக்கு நெருக்கமாக கட்டப்பட்டுள்ளதால் பெரும்பாலான வீடுகளில் 24 மணி நேரமும் மின்விளக்கையும் மின்விசிறியையும் பயன்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மின்வெட்டு காரணமாக மின்விசிறிகள் இயங்காமல் குழந்தைகள் மற்றும் முதியோர் ஓய்வு எடுக்க முடியாமல் தவித்தனர். ஒரு நாளைக்கு 7 மணி நேரம் மின்வெட்டு வரப்போவதாக பேசப்பட்டு வந்த சூழலில், திங்கள்கிழமை ஏற்பட்ட அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மின்வாரிய உதவி பொறியாளரைக் கேட்டபோது இதை முன்கூட்டியே அறிவிக்க முடியாது. திடீரென திம்மாவரம் துணை மின்நிலையத்தில் பழுது ஏற்பட்டது. அதனால் எப்போது சரிசெய்யப்பட்டும் என நேரம் குறிப்பிட முடியாது என்றார். இதனிடையே, காலை 10 மணியளவில் ஏற்பட்ட மின்வெட்டு மாலை 7 மணி வரை நீடித்தது. அதன் பின் மின்விநியோகம் சீரானது.