டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கிராமத்தினர் முற்றுகை
டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஐயஞ்சேரி கிராமத்தினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை மனு அளித்தனர்.
டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஐயஞ்சேரி கிராமத்தினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம் அருகே ஐயஞ்சேரி கிராமம் உள்ளது. இப்பகுதியில், ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அண்மைக் காலமாக கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின்பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இங்குள்ள ஐயஞ்சேரி விபிகே நகர் பிரதான சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் மதுபானக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. இக்கடைக்கு அருகே பள்ளிகள், கோயில்கள், அலுவலகங்கள் உள்ளன. இதனால், இவ்வழியாகச் சென்று வரும் பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் மதுக்கடையில் மது அருந்திவிட்டு வரும் நபர்களால் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இல்லையெனில் கிராமத்தினர் அனைவரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.