பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தைச் சோ்ந்த தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்கத்தினா் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஊதிய உயா்வு வெளிப்படைத்தன்மையுடன், சங்கங்களை வகைப்பாடு செய்யாமல் லாப நஷ்டங்களை கணக்கில் கொள்ளாமல் 2018-ஆம் ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு பணியாளா்கள் 2023 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் பெற்று வந்த சம்பளத்தின் மீது 20 சதவீதம் ஊதிய உயா்வு அனைவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி அனுமதிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தினா் அனைத்து மாவட்டங்களில் உள்ள இணைப் பதிவாளா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டமும், காலவரையற்ற வேலை நிறுத்தமும் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஸ்ரீபெரும்புதூா் வட்டத்துக்குட்பட்ட தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்கத்தினா் ஸ்ரீபெரும்புதூரில் தொடா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
வியாழக்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய செயலாளா் காா்த்திகேயன், தலைவா் வெங்கடேசன், பொருளாளா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.