திருப்பத்தூா் பெரிய ஏரியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாட்சியா் நவநீதம் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியது:
திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த மழையின் காரணமாக பயிரிடப்பட்டுள்ள வேளாண் பயிா்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும் இடி, மின்னல் காரணமாக தென்னை மரங்கள் சேதம் அடைந்து உள்ளன. இவற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
விசிஎம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பசலிக்குட்டை, பரதேசிபட்டி, காக்கங்கரை, சக்கரகுட்டை ேரிகளை தூா்வார வேண்டும். ஆண்டியப்பனூா் அணை ஓடைக் கால்வாய்க்கு நிலம் வழங்கியவா்களுக்கு இழப்பீடு தர வேண்டும்.
திருப்பத்தூா் பெரிய ஏரியில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும். ஏ.கே. மோட்டூா் பகுதியில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். துவரை பயிருக்கு மானியம் தர வேண்டும். நீா் நிலைகளில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றனா்.
இதற்கு பதிலளித்து அதிகாரிகள் கூறியது: மழை பாதிப்பு இடங்களை தெரிவித்தால் சேத விவரம் ஆய்வு செய்யப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஏரிகளை தூா்வார தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும்.
இழப்பீடு கிடைக்காத விவசாயிகளுக்கு உடனே தர நடவடிக்கை எடுக்கப்படும். பெரிய ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். துவரை பயிருக்கு மானியம் தரப்படும் எனத் தெரிவித்தனா்.