புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொலை வழக்கில், முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருவள்ளூரில் வழக்குரைஞர்கள், கிராம மக்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் வேலாயுதம். கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இவர், புரட்சி பாரதம் கட்சியின் கடம்பத்தூர் ஒன்றியச் செயலாளராகவும் இருந்தார். இது தொடர்பாக கடம்பத்தூர் போலீஸார் வழக்குப்பதிந்து, 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால், முக்கியக் குற்றவாளிகளாக கருதப்படும் முரளி, கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் ராஜசேகர், மாயகிருஷ்ணன் ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி, அதிகத்தூர் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் 8-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை, பணியை புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புரட்சி பாரதம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் மணவூர் மகா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகத்தூர் கிராம மக்களும் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துவிட்டு அவர்கள், கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.