வந்தவாசியை அடுத்த தெள்ளாறு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தேசிய டெங்கு விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
தெள்ளாறில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தெள்ளாறு வட்டார மருத்துவ அலுவலர் கே.செல்வமுத்துகுமாரசாமி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கோதண்டராமன் வரவேற்றார். தெள்ளாறு காவல் ஆய்வாளர் டி.முரளிசுந்தரம், டெங்கு விழிப்புணர்வு குறித்த கண்காட்சியை தொடக்கி வைத்துப் பேசினார்.
பின்னர், டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் கிராம முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. அப்போது, டெங்கு விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், இதுகுறித்த ஸ்டிக்கர்கள் ஆட்டோக்களில் ஒட்டப்பட்டன. இதையடுத்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கரன், முனீர்அகமது, பி.கணேஷ்குமார், டி.அருள்பாண்டியன், மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேட்டவலம்: இதேபோல, வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் கிரிஜா தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், சித்த மருத்துவர் சதேஷ் ஆகியோர் டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பது எப்படி, டெங்கு காய்ச்சல் வந்த பிறகு எடுக்க வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து பேசினர்.
மேலும், டெங்கு கொசு உற்பத்தியாகும் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில், பேரூராட்சி செயல் அலுவலர் பன்னீர்செல்வம், சுகாதார மேற்பார்வையாளர் வெற்றிவேலன், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரசேகரன், தசரதன் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், மருந்தாளுனர்கள், களப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் சித்த மருத்துவப் பிரிவு சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.