திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோர் தங்களது பிள்ளைகளின் கல்வி உதவித்தொகை உள்பட இதர உதவித் தொகைகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுதில்லியில் உள்ள கேந்திரிய சைனிக் போர்டு மூலம் முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோரின் குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்கப்படுகிறது. அதன்படி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் 2 பேருக்கு கல்வி நிதியுதவியாக ரூ.12 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை பெற 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையும், 11-ஆம் வகுப்பும் படிக்கும் மாணவ, மாணவிகள் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க வரும் அக்டோபர் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்கள் வரும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதர உதவித் தொகைகள்: மேலும், ஆதரவற்றோர் நிதியுதவியாக மாதம் ஆயிரம் ரூபாயும், முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோரின் ஈமச்சடங்கு நிதியுதவியாக ரூ.5 ஆயிரமும், திருமண நிதியுதவியாக ரூ.50 ஆயிரமும் (2 பெண் குழந்தைகளுக்கு), முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு 100 சதவீத ஊனமுற்றோர் நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவிகளைப் பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்கள் தங்களது மகன், மகள் பெயர்களை உரிய ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
மேலும், ஈமச்சடங்கு நிதியுதவி, திருமண நிதியுதவிகள் பெற நிகழ்வுகள் நடைபெற்ற 180 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுபோன்ற அனைத்து நிதியுதவிகளையும் பெற ksb.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.