செய்யாறு அருகே வீட்டில் சத்துணவு மாவு சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.
செய்யாறு வட்டம், ஏனாதவாடி கிராமம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் நெசவுத் தொழிலாளி செந்தில்குமாா். இவரது இளைய மகள் சுமித்ரா (ஒன்றரை வயது) கடந்த 11-ஆம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது சத்துணவு மாவை சாப்பிட்டதாகத் தெரிகிறது.
அப்போது, சுமித்ராவுக்கு இருமலுடன் மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சுமித்ரா, அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில், மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.