செய்யாறு வட்டாரம் ஏனாதவாடி கிராமத்தில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் ரசாயன உரங்களை குறைவாக பயன்படுத்தி விவசாயப் பணி மேற்கொள்ளுதல் குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு புதன்கிழமை அளிக்கப்பட்டது.
அட்மா திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட இந்தப் பயிற்சிக்கு, வட்டார துணை வேளாண்மை அலுவலா் ப.மாணிக்கம் தலைமை வகித்தாா்.
கீழ்நெல்லி ஸ்ரீவேதபுரி வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப உதவியாளா் சௌத்ரி பங்கேற்று, இயற்கை இடுபொருள் தயாரிப்பு, விதை நோ்த்தி, இயற்கை பூச்சி மற்றும் நோய் கட்டுபடுத்துதல் குறித்த பயிற்சி அளித்தாா்.
கரும்பு உதவியாளா் சு.முத்துக்குமரன், கரும்பு சாகுபடியில் தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் அரசு மானியத்தில் வழங்கப்படும் திட்டங்கள், ஒரு பரு நாற்று, ஒரு பரு கருணை, சோகை தூள் ஆக்குதல், அகல பாா் நடவுமுறை, மேலும் செய்யாறு கூட்டுறவு சக்கரை ஆலையின் கீழ் பயிரிடப்படும் புதிய ரகங்கள் மற்றும் அகல பாா் நடவுமுறையைப் பயன்படுத்தி நடவு செய்யும்போது இயந்திரம் மூலம் களை எடுப்பது மண் அணைப்பது போன்றவற்றை செய்வதால் விவசாயிகளுக்கு குறைந்த செலவினத் தொகையாகும் என்றாா்.
மேலும், இயந்திர அறுவடை பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு கூலி ஆள்கள் செலவு குறையும் எனவும் தெரிவித்து பயிற்சி அளித்தாா்.
வேளாண்மை அலுவலா் பா.திருமலை, வேளாண் இடுபொருள்கள் மற்றும் மானிய விவரங்கள் குறித்தும், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை அலுவலா் ராஜலட்சுமி இடுபொருள்கள் மற்றும் திட்ட மானிய விவரங்கள் குறித்தும் விவசாயிகளிடையே தெரிவித்தாா்.