சூறைக்காற்றில் சாய்ந்த மின் கம்பங்கள்: விவசாயிகள் அவதி
சூறைக்காற்றில் சாய்ந்த மின் கம்பங்கள்: விவசாயிகள் அவதி
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பலத்த சூறைக் காற்றுடன் பெய்த மழையில், 12 மின் கம்பங்கள் சாய்ந்தன. இவை இன்னும் சரிசெய்யப்படாமல் உள்ளதால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.
கண்ணமங்கலம், கொங்கராம்பட்டு, ஆண்டியம்பாளையம், காளசமுத்திரம், குப்பம் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக அக்கிராமங்களில் சுமாா் 12 மின் கம்பங்கள் சாய்ந்தன. இவற்றில் பெரும்பாலானவை விவசாய நிலங்களின் மின் கம்பங்கள் ஆகும். இதனால் விவசாயிகள் பயிா் வைத்து தண்ணீா் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகின்றனா்.
மேலும் இது குறித்து கண்ணமங்கலம் உதவி மின் பொறியாளா் சிலம்பரசினிடம் கேட்டதற்கு, மழையால் கீழே விழுந்த மின் கம்பங்களை சரிசெய்து வருகிறோம். விரைவில் அனைத்து கம்பங்களும் சரிசெய்யப்படும் என்று தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
ஆனால், கொங்கராம்பட்டு உள்ளிட்ட பகுதி விவசாயிகளோ எங்கள் பகுதியில் விழுந்த மின் கம்பங்கள் அப்படியே உள்ளன. இன்னும் சரிசெய்யாமல் உள்ளதால் நாங்கள் விவசாய நிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்.
உடனடியாக சரிசெய்யாவிட்டால் எங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தனா்.