ஆம்பூர் அருகே காப்புக்காட்டில் குட்டியுடன் சிறுத்தைப்புலி நடமாடுவது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் யாரும் தனியாக அந்தக் காட்டுப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த உமர்ஆபாத் அருகே உள்ளது பாலூர். இந்த கிராமத்தையொட்டி உள்ள காப்புக்காட்டில் கன்னியம்மன் கோயில் அருகில் வால்பாறை குகைப் பகுதி வழியே வியாழக்கிழமை காலை கிராம மக்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது விநோதமான உறுமல் சப்தம் கேட்டுள்ளது. மேலும் பறவைகள் கூட்டம் வழக்கத்துக்கு மாறாக விநோத ஒலியை எழுப்பியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அப்பகுதிக்கு சென்றுபார்த்தபோது சிறுத்தையும் அதன் குட்டியும் அவ்வழியாக நடந்து சென்ற காலடித் தடம் காணப்பட்டது.
இதனால் அச்சமடைந்த அவர்கள் இதுகுறித்து ஆம்பூர் வனத் துறை அலுவலகத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். இதில் சிறுத்தைப் புலி மற்றும் அதன் குட்டியின் கால் தடம் பதிவாகி இருந்தது.
அதனால் காப்புக் காட்டுப் பகுதியில் சிறுத்தைப் புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப் பட்டது.
அதைத்தொடர்ந்து கிராம மக்கள் யாரும் அப்பகுதிக்கு தனியாக செல்ல வேண்டாம் என வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.