ஜோலார்பேட்டை அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தித் தரக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த மூக்கனூர் ஊராட்சி புதூர், அனுமந்தன் வட்டத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து சுடுகாட்டிற்குச் செல்ல அதே பகுதியைச் சேர்ந்த இருவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஒத்தையடி பாதையை கடந்த 30 வருடங்களாக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிலத்தின் உரிமையாளர்கள் பாதையை மறித்துவிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் இறந்தவர்களின் சடலங்களைக் கொண்டு செல்ல வழியில்லை எனக் கூறி வருவாய்த் துறையினரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், இதுதொடர்பாக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை அனுமந்தன் வட்டத்தைச் சேர்ந்த குட்டி (எ) குப்பன் இறந்துவிட்டார். அவரது சடலத்தை எடுத்துச் செல்ல வழியில்லாமல் அப்பகுதி மக்களும், உறவினர்களும் நாட்டறம்பள்ளி வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர். ஆனால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வில்லை என தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர்-நாட்டறம்பள்ளி சாலையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த வட்டாட்சியர் சச்சிதானந்தம், சமூகப் பாதுகாப்பு திட்ட அலுவலர் பிரபு கணேஷ் மற்றும் ஜோலார்பேட்டை போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் நிலத்தின் உரிமையாளர்கள் சடலத்தை எடுத்துச் செல்ல வழிவிடுவதாகக் கூறியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.