ஆற்காடு அருகே வேன் சக்கரத்தில் சிக்கிய பள்ளி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
ஆற்காட்டை அடுத்த நந்தியாலம் ஊராட்சிக்கு உள்பட்ட தென்நந்தியாலம் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் இலியாஸ். இவர் பழைய பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் பாத்திமா பானு (8). இவர் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை பாத்திமா பானு பள்ளிக்கு செல்வதற்காக வழக்கமாக வீட்டின் அருகே வரும் பள்ளி வேனில் ஏறினார். சிறிது நேரத்தில் வேனில் இருந்த உதவியாளர் பானுவிடம், மாணவி பாத்திமா பானு தனக்கு மயக்கம் வருவதாகக் கூறினாராம்.
இந்நிலையில், வேன் ரத்தினகிரி பகுதிக்குச் சென்று மாணவிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் மேல்விஷாரம் வந்தபோது ஓட்டுநர் அசேனிடம், பாத்திமா பானுவை வீட்டில் இறக்கிவிட்டு செல்லுமாறு உதவியாளர் கூறினாராம்.
இதையடுத்து மாணவி பாத்திமா பானுவை அவரது வீட்டின் அருகே இறக்கிவிட்டு புறப்பட்ட போது, வேனின் பின் சக்கரம் மாணவி மீது ஏறியது. இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டதை அடுத்து ஓட்டுநர் அசேன் வேனை நிறுத்தியுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த மாணவி பாத்திமா பானுவை அருகே இருந்தவர்கள் மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரத்தினகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநர் அசேன் (27), உதவியாளர் பானு ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.