பேர்ணாம்பட்டில் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பேர்ணாம்பட்டு வட்ட ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் புதன்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து ஆட்சியர் 304 மனுக்களைப் பெற்றார்.
பெரும்பாலான மனுக்களில் பொதுமக்கள் பேர்ணாம்பட்டில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுகுறித்து பொதுமக்களிடமும், பேர்ணாம்பட்டு காவல் ஆய்வாளர் சீனிவாசனிடமும் ஆட்சியர் பேசினார்.
தற்போதுள்ள சிறிய அளவிலான பேருந்து நிலையத்தின் பக்கத்தில் உள்ள காவல் நிலைய கட்டடம் பழுதடைந்துள்ளதால், அதை இடித்து விட்டு பேருந்து நிலையத்தை விரிவு படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் யோசனை கூறினார். காவல் நிலையத்தை அருகில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் புதிதாகக் கட்டிக் கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.
காவல் நிலைய கட்டட இடத்தை பேருந்து நிலையத்துக்கு ஒதுக்குவது தொடர்பாக என்ன வழிமுறைகள் உள்ளதோ அதை செயல்படுத்தலாம் என ஆட்சியர் கூறினார். அப்போது எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன், வட்டாட்சியர் பத்மநாபன், சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் சரவணன், நகராட்சி ஆணையர் சௌந்தரராஜன், பொறியாளர் மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கரீம், நகர அதிமுக செயலர் எல்.சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.