ஆம்பூர் அருகே ரயில்வே இருப்புப் பாதையோரம் கானாற்று வெள்ளநீர் தேங்கியதால் இருப்புப் பாதை சேதமடைந்தது. இதனால் அவ்வழியாக ரயில்கள் தாமதமாகச் சென்றன.
ஆம்பூர் அருகே மின்னூர் மலைப் பகுதியில் பெய்த கனமழையால் அப்பகுதி கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளநீர் ரயில்வே குகை வழிப் பாதையில் தேங்கியது. அங்கு வடிகால்வாய்கள்
இல்லாததால் இருப்புப் பாதையோரம் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. இதனால், புதன்கிழமை நள்ளிரவு இருப்புப் பாதையோரம் மண் சரிவு ஏற்பட்டு, ஜல்லிக் கற்கள் சரிந்து இருப்புப் பாதை சேதமடைந்தது.
அவ்வழியாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பணியாளர்கள் இதுகுறித்து விண்ணமங்கலம் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பல்வேறு ஊர்களில் இருந்து ரயில்வே பணியாளர்கள் மின்னூருக்கு வரவழைக்கப்பட்டனர். உடனடியாக மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு மண் சரிவு தடுக்கப்பட்டது. மேலும், ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டன. இதனால் அப்பகுதியில் அதிகாலையில் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அவ்வழியாக குறைவான வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன.
மண் சரிவு ஏற்பட்டு ரயில்வே இருப்புப் பாதை சேதமடைந்தது சரியான நேரத்தில் கண்டறியப்பட்டதால் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.