பள்ளியின் பூட்டை உடைத்து தொலைக்காட்சிப் பெட்டி திருட்டு
வேலூரில் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் பூட்டை உடைத்து எல்சிடி தொலைக்காட்சிப் பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வேலூரில் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் பூட்டை உடைத்து எல்சிடி தொலைக்காட்சிப் பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வேலூர் ஓல்டு டவுன் பகுதியில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்கள் காலை அப்பள்ளிக்கு வந்தனர். அப்போது, ஸ்மார்ட் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம்.
இதுதொடர்பாக அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் சையத்காலித்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், அவர் பள்ளிக்கு வந்து பார்த்தபோது ஸ்மார்ட் வகுப்பறையில் இருந்த எல்சிடி தொலைக்காட்சிப் பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே சில மாதங்களுக்கு இப்பள்ளியில் முன் இருமுறை திருட்டுச் சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.