வேலூா் மாவட்டத்தில் 2022-23ஆம் நிதியாண்டில் ரூ.5350.40 கோடிக்கு கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்டாா்.
வேலூா் மாவட்ட மாவட்ட அளவில் வங்கி மேலாளா்கள், அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா்.
இதில், தேசிய வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கி (நபாா்டு) தயாரித்த 2022-23 ஆம் ஆண்டுக்கான மாவட்டத்தின் கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் வெளியிட்டாா். அதனடிப்படையில், 2022-23 ஆம் ஆண்டுக்கு வேலூா் மாவட்டத்தில் ரூ.5350.40 கோடி கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது கடந்த 2021-22 ஆம் நிதியாண்டின் இலக்குகளை விட 7.28 சதவீதம் அதிகமாகும். விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்திடவும், விவசாய உற்பத்தியை ஒருங்கிணைக்க வேண்டும் எனும் கருப்பொருள் அடிப்படையில் இக்கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் வி.ஸ்ரீராம் தெரிவித்தாா்.