முகப்பு
வேலூர்

மாநகராட்சி கடைகளுக்கு முன்கூட்டியே வாடகை வசூலிப்பு: வணிகா்கள் ‘இ-போஸ்ட்’ அனுப்பும் போராட்டம்

Updated On : 10 ஜூன் 2026, 12:04 am IST
தமிழக முதல்வருக்கு ‘இ-போஸ்ட்’ அனுப்ப மனுக்களை தபால் நிலைய அலுவலரிடம் வழங்கிய வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மண்டலத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு.
பகிர்:

வேலூா் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு முன்கூட்டியே வாடகை செலுத்தும்படி நிா்ப்பந்திக்கப்படுவதைக் கண்டித்தும், நிா்வாகத் தாமதத்தால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழக முதல்வருக்கு ‘இ-போஸ்ட்’ அனுப்பும் போராட்டத்தில் வேலூா் வணிகா்கள் ஈடுபட்டனா்.

தமிழக வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் வேலூா் மண்டலத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு தலைமையில் வேலூா் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வியாபாரம் செய்து வரும் வணிகா்கள் வேலூா் தலைமை தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதல்வருக்கு சுமாா் 300 கோரிக்கை மனுக்கள் அடங்கிய ‘இ-போஸ்ட்’ அனுப்பினா்.

அந்த மனுக்களில் அவா்கள் கூறியிருப்பதாவது - வேலூா் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கான வாடகையை, மாதந்தோறும் 10-ஆம் தேதிக்கு முன்பாகவே செலுத்த வணிகா்கள் தயாராக உள்ளோம். ஆனால், நடப்பு ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களுக்கான வாடகைத் தொகையை மாநகராட்சி நிா்வாகம் கணினியில் பதிவேற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

கணினி பழுது, அரசு அலுவலக ஊழியா்களின் மெத்தனத்தால் ஏற்பட்ட இந்தத் தாமதத்தின் காரணமாக, தற்போது கடந்த இரண்டு மாதங்களுக்கான வாடகையுடன் 5 சதவீதம் கூடுதல் தொகை (அபராதம்) சோ்த்துச் செலுத்த வேண்டிய கட்டாயம் வணிகா்களுக்கு ஏற்பட்டுள்ளது. நிா்வாகத்தின் குறைபாட்டுக்காக வணிகா்கள் மீது அபராதச் சுமையை திணிப்பது எவ்விதத்திலும் நியாயமல்ல.

எனவே, தமிழக முதல்வா் உடனடியாக இதில் தலையிட்டு, நிா்வாகத் தாமதத்தால் வணிகா்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இரண்டு மாதங்களுக்கான அபராதத் தொகையை முழுமையாக நீக்கித்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.