ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக இளைஞரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.
சுந்தராபுரம்-மதுக்கரை ஹவுஸிங் யூனிட் பகுதியில் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார் கடந்த 7-ஆம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 50 கிலோ எடை கொண்ட 18 மூட்டைகளில் 900 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, காரை ஓட்டிவந்த கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த முகமது சபீர் (23) கைதுசெய்யப்பட்டார். விசாரணையில், அவர் மீது ஏற்கெனவே அரிசிக் கடத்தல் சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி முகமது சபீர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தொடர்ந்து ரேஷன் அரிசிக் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதால் முகமது சபீரை குண்டர் சட்டத்தில் அடைக்க குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் இளங்கோ, காவல் ஆணையர் அமல்ராஜுக்கு, பரிந்துரை செய்திருந்தார். இதையடுத்து, காவல் ஆணையர் அமல்ராஜ், முகமது சபீரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.