கெளசிகா நதியில் கழிவுகளைக் கொட்டினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் எச்சரித்துள்ளார்.
நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த கே.எஸ்.பி.தொழிற்சாலை அருகே கோவை-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் கெளசிகா நதிப் பள்ளம், சாலையோரங்களில் கோழிக் கழிவுகள், குப்பையை இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் கொண்டுவந்து கொட்டிச் செல்கின்றனர். இங்குள்ள குப்பைக்கு சிலர் தீவைக்கின்றனர். இதனால், நச்சுப்புகை பரவுகிறது. அருகில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள், தனியார் நிறுவனத் தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கூடலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் உத்தரவின்பேரில், துப்புரவுப் பணியாளர்கள் பொக்லின் இயந்திரம் மூலமாக அப்பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர். மேலும், அந்த இடத்தில் பேரூராட்சி சார்பில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதில், இப்பகுதியில் குப்பை, கோழிக் கழிவுகளைக் கொட்டுபவர்களைக் கண்காணிக்க ஆள்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட உள்ளது. இதை மீறி, கழிவுகளைக் கொட்டுபவர் மீது, வாகனங்களைப் பறிமுதல் செய்து காவல் துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.