வால்பாறை: வால்பாறை எஸ்டேட் அரசுப் பள்ளி வளாகத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து வகுப்பறைகளில் இருந்த பொருள்களை சேதப்படுத்தின.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் தொடங்கி 4 மாதங்களுக்கு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். காட்டு யானைகள் கேரள வனத்தில் இருந்து இடம்பெயா்ந்து வால்பாறை பகுதிக்கு வருகின்றன.
தினந்தோறும் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் யானைகள் அங்கு பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி செல்கின்றன.
இந்நிலையில் வால்பாறையை அடுத்த உருளிக்கல் எஸ்டேட் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு (அக். 21) கூட்டமாக வந்த யானைகள் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்துக்குள் புகுந்தன. பின்னா் வகுப்பறைகளின் ஜன்னல் கதவுகளை தும்பிக்கையால் முட்டி தள்ளியதோடு உள்ளிருந்த இருக்கைகள், பீரோக்களை இழுத்துப்போட்டு சேதப்படுத்தின.
மேலும், அப்பகுதியில் உள்ள தொழிலாளா்களின் குடியிருப்புகளையும் சேதப்படுத்தின.
தகவலின்பேரில் அங்கு சென்ற வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை அங்கிருந்து விரட்டினா். பள்ளி புதன்கிழமை வழக்கம்போல செயல்பட்ட நிலையில், வன ஊழியா்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.