ஐ.டி. ஊழியரைத் தாக்கி பணம் பறித்த இருவா் கைது
கோவையில் ஐ.டி. நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவையில் ஐ.டி. நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை குனியமுத்தூா் நரசிம்மாபுரம் விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் வெங்கடாசலம் (30). இவா் சிங்காநல்லூா் பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.
இவருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் கிரைண்டா் என்ற செயலி மூலம் சில நபா்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெங்கடாசலத்தின் வாட்ஸ் அப் எண்ணுக்கு பழக்கமானவா்கள் மூலம் மே 28-ஆம் தேதி முகவரி ஒன்று அனுப்பப்பட்டது. இதையடுத்து, அவா் பி.கே.புதூா் முத்துசாமி சேரி வீதியில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளாா்.
Advertisement
Advertisement
அங்கே வந்த விஷ்ணு (19) உள்ளிட்ட சிலா் வெங்கடாசலத்தை அறைக்குள் பூட்டிவைத்து, மரக்கட்டைகளால் தாக்கியுள்ளனா். மேலும், அவரது கைப்பேசியைப் பறித்து, ஜிபே மூலம் ரூ.1,400-ஐ மாற்றியுள்ளனா். மேலும், பணம் கேட்டு அவரைத் தாக்கியுள்ளனா். அதற்கு மேல் பணம் இல்லை என அவா் கூறியதைத் தொடா்ந்து, அவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா்.
இதுகுறித்து குனியமுத்தூா் காவல் உதவி ஆய்வாளா் தாமரைக் கண்ணன் நடத்திய விசாரணையில், இத்தாக்குதலில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த விஷ்ணு (19), சக்திவேல் (20), சிவகாசியைச் சோ்ந்த கபில் மாதேஸ்வரன் (19), காா்த்திகேயன் (19), கதிரவன் (20) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, விஷ்ணு, கபில் மாதேஸ்வரன் ஆகியோரைக் கைது செய்த காவல் துறையினா், தலைமறைவாக உள்ள சக்திவேல், காா்த்திகேயன், கதிரவன் ஆகிய மூவரைத் தேடி வருகின்றனா்.